செய்திகள்

சந்தையூர் தீண்டாமை சுவர் விவகாரம்- மதுரை கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜரானார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மாலை மலர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சந்தையூரில் பிரசித்திபெற்ற ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி ஒரு பிரிவினரால் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இதன் காரணமாக இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. சுவரை அகற்ற வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஒரு பிரிவினர் மலையில் குடியேறினர். மாநிலம் முழுவதும் எதிரொலித்த இந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இரு சமூகத்தினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது.

இந்த நிலையில் பிரச்சனைக்குரிய சுவரின் ஒரு பகுதியை இடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சுவரை தீண்டாமை சுவர் என அறிவித்த மாவட்ட நிர்வாகம், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தது. தீண்டாமை சுவர் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கருப்பையா என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகஸ்டு 28-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

கலெக்டர் தரப்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் தீண்டாமை சுவர் இல்லை. யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு செல்லலாம். இரு தரப்பினரையும் அழைத்து பேசிய பிறகு தற்போது அமைதி நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டது.