அலங்காநல்லூர்:
மதுரை சிக்கந்தர்சாவடியில் உள்ள மந்தையம்மன் கோவில்தெரு பகுதியில் கிறிஸ்தவ ஜெபவீடு செயல்பட்டு வருகிறது. இங்கு மதமாற்றம் செய்வதாக கூறி கிறிஸ்தவ போதகர் ரவி ஜேக்கப் என்பவரிடம் தகராறு செய்து பைபிள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை ஆளும் அரசின் இயலாமை காரணமாக ஆண்டாள் சமபவத்தில் தொடங்கி சில மாதங்களாக இந்து மதத்திற்கு வலு சேர்ப்பதாக நினைத்து பா.ஜ.க. ஆதரவு அமைப்புகள் மூலம் மதரீதியான தாக்குதல் நடந்து வருகிறது.
தமிழ் மொழியை பேச முடியாத சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்படக்கூடிய தோல்வியை தவிர்ப்பதற்காக பா.ஜ.க. ஆதரவு அமைப்புகள் பல்வேறு வழிகளில் கலவரத்தை தூண்டி விடுகிறது. சாதி-மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை போலீசார் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #maduraichurch #seeman