செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் ரூ. 4 லட்சம் தங்க நகை பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldseized

மாலை மலர்

அவனியாபுரம்:

மதுரை விமான நிலைம் மூலம் வெளிநாட்டில் இருந்து தங்கம், விலை உயர்ந்த பொருட்கள், போன்றவை கடத்தி கொண்டு வருவது அடிக்கடி நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேர் ஆசன வாயிலில் வைத்து கடத்தி வந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் அதிகரித்துள்ளதையடுத்து மதுரை விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து மதுரை வரும் ஸ்ரீரங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி கமி‌ஷனர் வெங்கடேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று இரவு மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அமிதாபீவி என்பவர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பெண் அதிகாரிகள் அமிதாபீவியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர் உள்ளாடைக்குள் 120 கிராம் தங்கச் செயினை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 ஆகும்.

அதிகாரிகள் கடத்தல் நகையை பறிமுதல் செய்து அமிதாபீவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.