மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறித்து மதுரை ஆதீனம் இன்று கூறியதாவது:-
மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீ விபத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய பேரரசி மங்கையற்கரசி அழைப்பின் பேரில் மதுரைக்கு எழுந்தருளி ஆதீனத்தை நிறுவி சைவ சமயத்தை நிலைநாட்டிய சீர்காழி தந்த திருஞான சம்பந்த பெருமான் நடனமாடிய, தரிசனம் செய்த வளாகம் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.
அக்காலத்தில் கட்டப்பட்ட தூண்களுக்கும், ஆயிரங்கால் மண்டபத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றால் சிவபெருமான் - பார்வதி தேவியாரின் கோபமும், ஞானிகளின் சாபமும் தான் இந்த தீ விபத்துக்கு காரணம்.
சைவ - வைணவ ஆலயங்கள் அறநிலைய துறைக்கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில்களில் பணம் கொடுத்தால்தான் தரிசனம்.
பணம் கொடுத்து ரசீது வாங்கினால்தான் சன்னதி முன்பு நின்று தரிசனம். கோவில்களில் ஊழல் நிறைந்து விட்டதால் தரிசன கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.
ஆலய நுழைவு வாயில் முதல் கருவறை வரை பணம் தான் பேசுகிறது. அறநிலையத்துறையில் பல்லாயிரக்கணக்கில் சம்பளம் வாங்கி வேலை செய்கிற இணை ஆணையர்கள், கண்ணியத்தோடு நடப்பது இல்லை. அவர்கள் வானத்தில் இருந்து பூமிக்கு குதித்தது போன்று நினைத்து வருகிறார்கள். ஆலயம் என்றால் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மடம் என்றால் என்ன? என்பது அவர்களுக்கு தெரியாது.
சைவம் என்றால் என்ன? வைணவம் என்றால் என்ன? என்பதும் அவர்களுக்கு தெரியாது. பக்தியும் இல்லாமல் அவர்களின் அணுகுமுறை இருக்கிறது.
அறநிலையத்துறையில் பணியாற்றுவதற்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி வழங்க ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு சொல்லி இருக்கிறோம்.
பணம் ஒன்றையே குறிக்கோளாக கருதி ஆலயத்தில் பணி செய்பவர்கள் இனிமேல் தங்களை திருத்திக்கொண்டால் நல்லது. ஆலய வளாகங்களில் வணிகம், வியாபாரம் நடைபெற கூடாது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய பாதுகாப்புத்துறை இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. இந்த அற நிலையத்துறை கோவில்களுக்கு வேண்டியதே இல்லை. அதனை கலைத்து விட்டு கோவில்களை செல்வந்தர்களிடமும், மக்களிடமும் ஒப்படைக்க வேண்டும். அதற்கான திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும்.