செய்திகள்

மடுகரையில் வீடுகளில் கொள்ளையடிக்க நோட்டமிட்டவர் கைது

மடுகரையில் வீடுகளில் கொள்ளையடிக்க நோட்டமிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

சேதராப்பட்டு:

மடுகரை போலீசார் நேற்று இரவு மடுகரை நேரு நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கத்தியை பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முறையாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மடுகரை முத்துநகரை சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (வயது 22) என்பதும், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் நோக்கில் கத்தியுடன் நின்றிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து செல்வத்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.