செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் 125-வது ஆண்டு விழா தொடங்கியது

சென்னை உயர் நீதிமன்றத்தின் 125-வது ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. அப்போது, 1 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.

மாலை மலர்

சென்னை:

விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் 1892-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி முடிவடைந்தது. அப்போதைய கவர்னரின் உத்தரவுப்படி உயர் நீதிமன்றம் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா இன்று தொடங்கியது. இதில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார்.

அப்போது, ரூபாய் 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார். அதைதொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஆர்.பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும் பங்கேற்றனர்.