செய்திகள்

பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை: சிறை அதிகாரி

பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட போது அவரது கைரேகையை பெறவில்லை என சிறை அதிகாரி மோகன்ராஜ் ஐகோர்ட்டில் விளக்கமளித்திருந்தார்.

மாலை மலர்

சென்னை:

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது, அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால் அதன் பெயரிலேயே விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை வைத்ததாக சான்றளித்த மருத்துவர் பாலாஜி ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, பாலாஜி கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி மற்றும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார். இதனையடுத்து, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று ஆஜரான சிறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், சிறையில் அடைக்கப்பட்ட போது ஜெயலலிதாவின் கைரேகையை பெறவில்லை என விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஆதார் அட்டை உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தேவைப்பட்டால் கைரேகையை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.