செய்திகள்

முதல்வர் பற்றிய செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு தடை நீடிப்பு

முதல்-அமைச்சர் குறித்து செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue

மாலை மலர்

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

‘தமிழக முதல்-அமைச்சராக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி பதவி ஏற்றேன். என்னுடைய கடினமான உழைப்பினால், அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியாக எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வருகிறேன்.

இந்த நிலையில், வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவதூறு தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பேட்டியை கடந்த 11-ந்தேதி ‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி அவர்கள் அளித்த பேட்டியை நாரதா நியூஸ் என்ற ஆன்லைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த 23-ந்தேதி விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், முதல்அமைச்சர் குறித்து அவதூறு செய்தி வெளியிட இடைக்கால தடை விதித்தார். மேத்யூ சாமுவேலுக்கு நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் நோட்டீசு மேத்யூ சாமுவேலுக்கு சென்றடையவில்லை என்று கூறப்பட்டது.