செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உள்பட சட்டசபை தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உள்பட சட்டசபை தொடர்பான அனைத்து வழக்குகளும் டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழக முதல்வரை மாற்ற வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்த டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி தகுதியிழப்பு செய்யப்பட்டனர். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அவர்கள் அனைவரும் சென்னை ஐகோர்டில் முறையிட்டனர்.

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தி.மு.க சார்பில் மு,க ஸ்டாலின் தொடர்ந்த வழக்குடன் மேற்கொண்ட தகுதி இழப்பு வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபை தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால் அனைத்து வழக்குகளும் மொத்தமாக விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் உள்பட சட்டசபை தொடர்பான 7 வழக்குகளும் வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6,7,18,19,20 ஆகிய தேதிகளில் வாதங்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.