செய்திகள்

மாதவரத்தில் பதுங்கி இருந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேர் கைது

மாதவரத்தில் பதுங்கி இருந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாதவரம் பகுதியில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவுடிகள் 6 பேர் பதுங்கி இருந்தனர்.

இவர்களை பிடிக்க அரியானா மாநில போலீஸ் டி.ஐ.ஜி. சதீஷ்பாலியான் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். மாதவரம் பகுதியில் கூலிப்படை கும்பல் பதுங்கி இருந்த இடத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர். அப்போது மாதவரம் போலீசாரும் பாதுகாப்புக்காக சென்றனர்.

பின்னர் துப்பாக்கிமுனையில் ரவுடிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். அரியானாவைச் சேர்ந்த சுபாஷ், மதன்சர்மா, அனில், சந்தீப், ராகுல்சிங், சுமித் ஆகிய 6 பேர் பிடிபட்டனர்.

இவர்கள் அனைவரையும், சென்னையில் இருந்து அரியானா மாநிலத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரியானா கூலிப்படைக்கு சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் தான் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கூலிப்படை கும்பல் அரியானாவில் இருந்து சென்னை வந்தது எப்படி? என்பது பற்றி மாதவரம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.