விபத்து 
செய்திகள்

மாதவரம் அருகே டேங்கர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

மாதவரம் அருகே டேங்கர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மாதவரம்:

ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (26). தனியார் நிறு வன ஊழியர்.

இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த வேலு (25) என்பவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் ஊருக்கு செல்வதற்காக மூலக்கடையை அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த டேங்கர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சூர்யா, வேலு ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.