ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் ஆவடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பால்வளத்துறை அமைச்சர் ஆவினுக்கு மட்டுமல்ல, பால்வளம் நிறைவாக உள்ளதை உறுதி செய்வதற்கும் அவர் தான் அமைச்சர்.
சில தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கெமிக்கல் ‘பெராக்சைடு’ பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறுகிறார்.
இந்த ரசாயன கெமிக்கல் எத்தனை ஆண்டுகளாக கலக்கப்படுகிறது. அது ஏன் கவனிக்காமல் விடப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
தனியார் பாலில் ரசாயனம் கலப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து இருக்கலாம். அமைச்சர் பேட்டி கொடுப்பதும் அறிக்கை விடுவது அவரது ஆட்சியை எதிர்த்து அவரே அறிக்கை விடுவது போல உள்ளது.
பாலில் ரசாயனம் கலப்பு குறித்து அதிகாரிகள் கடமையை செய்யவில்லை எனக்கூறுவது சரியல்ல. மாநில அரசின் பால் வளத்துறை ஆணையரகத்திற்கு பாலில் ரசாயனம் கலக்கும் நிறுவனத்தை முடக்க அதிகாரம் உள்ளது. அதை செய்யாமல் மத்திய அரசு நிறுவனத்தை குறை கூறக்கூடாது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த 8 முயற்சிகளை வரவேற்கிறேன். அவை அனைத்தும் நான் எடுத்த முயற்சி. தற்போது நடைமுறைக்கு வந்து உள்ளது.
சசிகலா குடும்பம் ழுமுமையாக அகற்றப்பட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாஞ்சில் சம்பத், புகழேந்தியின் நடவடிக்கைகளை அந்த அணியினர் கட்டுப்படுத்த வேண்டும்.