செய்திகள்

ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை இல்லை- காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் எழுப்பிய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. #WinterSession #CongDemandsJPC

மாலை மலர்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.