செய்திகள்

திமுக கூட்டணி மக்கள் கூட்டணி - மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியானது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற மக்கள் கூட்டணி என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். #DMK #MKStalin

மாலை மலர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கலைஞர் கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் தி.மு.கழகம்; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. மத்தியிலும்  மாநிலத்திலும் நடந்திடும் அநியாய  அவல ஆட்சி தொடர்ந்திடாமல் தடுத்திட - தவிர்த்திட  தகர்த்திட - இனி எக்காலத்திலும் எத்தர் கூட்டம் நம் தாய்நாட்டு மக்களை ஏமாளிகளாக்காமல் காத்திட, இரண்டு ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி வீரமிகு விருதுநகரில் மார்ச் 6-ந்தேதி நடைபெற இருக்கிறது.

மார்ச் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வீறுநடை என்பதே பொருளாகும். ஆறு போல பெருக்கெடுக்கும் வீறுநடையை மார்ச் 6ல் விருதுநகரில் காட்டிடவும், அதனை வெற்றி நடையாக மாற்றிடவும் தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளை உங்களில் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன்.

ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் மக்கள் விரோத பாசிச மத்திய அரசையும்  அதனிடம் மண்டியிட்டு மாநிலத்தின் உரிமைகளை அடகுவைத்த மாநில அரசையும் ஒரு சேர எதிர்க்கும் உணர்வும் வல்லமையும் கொண்ட ஒரே இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர்  பேரணி அமையப் போகிறது.

காலத்தின் தேவை கருதி  நாட்டின் நலனில் அக்கறை கொண்டு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் பேரியக்கமும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்து கொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற -சிறுபான்மை நலன் காக்கின்ற  ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற  யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான  சமத்துவத்தை வலியுறுத்துகிற கொள்கைக் கூட்டணி; மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி.

அவர்களின் பணநாயக மமதையை ஜனநாயக ஆயுதம் கொண்டு விரட்டிட, ஆட்சி மாற்றத்தை உறுதி செய்திட, வெற்றிக்கு கட்டியம் கூறிட விருதுநகரில் திரண்டிடுவோம்!