செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமீறல்- அரசு ஊழியர் சஸ்பெண்டு

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக அரசு ஊழியரை சஸ்பெண்ட் செய்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயகாந்தன்.

இவர் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் முத்தியால்பேட்டையில் இயங்கும் குழந்தைகள் திட்ட பிரிவில் பல்நோக்கு ஊழியராக பணி செய்கிறார். பணிநிரந்தரம் பெற்ற ஊழியரான ஜெயகாந்தன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலான பிறகும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வந்தார்.

முகநூல் பக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் வேட்பாளர்கள் படங்களுடன் கதிர்அரிவாள் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பதிவுகளை வெளியிட்டு வந்தார். மேலும் வாட்ஸ்-அப் பதிவுகளிலும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மதிக்காமல் ஜெயகாந்தன் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயகாந்தனை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் யஷ்வந்தையா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஜெயகாந்தன் மீது துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. #LSPolls

SCROLL FOR NEXT