செய்திகள்

சென்னையில் சமையல் கியாஸ் விலை 25 ரூபாய் உயர்வு

சென்னையில் கடந்த மே மாதம் வீட்டு சிலிண்டர் 728 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஜூன் மாதம் இதன் விலை 25 ரூபாய் உயர்ந்து ரூ.753-க்கு விற்கப்படுகிறது.

மாலை மலர்

சென்னை:

சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ கியாஸ் சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் வினியோகித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. இதன்படி ஒவ்வொரு மாதம் 1-ந்தேதி சமையல் கியாஸ் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் வீட்டு சிலிண்டர் 728 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஜூன் மாதம் இதன் விலை 25 ரூபாய் உயர்ந்து ரூ.753-க்கு விற்கப்படுகிறது.

சிலிண்டர் விலை உயர்ந்தாலும் மானிய விலையில் சிலிண்டர் பெறுபவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. 453 ரூபாய் போக மீதி தொகை அவரவர் வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும். ஓட்டல் மற்றும் கடைகளில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை 50 காசு உயர்ந்து 1427.50 ரூபாயாக உள்ளது.

டெல்லியில் வீட்டு சிலிண்டர் விலை ரூ.737.50, கொல்கத்தாவில் ரூ.763.50, மும்பையில் ரூ.709.50 விலைக்கு வினியோகிக்கப்படுகிறது. இதுபற்றி எழும்பூரில் உள்ள லார்டு பாலாஜி கியாஸ் ஏஜென்சியினர் கூறுகையில், கியாஸ் விலை உயர்வால் ஏழை-நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது வங்கி கணக்கிற்கு கூடுதலாக பணம் வரவு வந்து விடும் என்றனர்.