சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கோடை வெயில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்க கடலில் இலங்கைக்கும் தென் தமிழ்நாட்டுக்கும் இடையே கன்னியாகுமரி கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மாலத் தீவில் இருந்து கன்னியாகுமரி வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையடுத்து அடுத்த 48 மணி நேரத்துக்கு தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை மற்றும் வட தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர வெப்ப நிலை அதிகரிக்கும். கடந்த சில நாட்களாக காலை நேரம் வெப்பம் 18.6 டிகிரி செல்சியசாக இருந்து வந்தது. அது 22 டிகிரி செல்சியசாக உயரும் என்றும், இரவு நேர வெப்பமும் அதிகரிக்கும் என்றும், சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.