செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் கலப்பு திருமணம் செய்தவர் தற்கொலை

காதல் கலப்பு திருமணம் செய்தவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மேல தொட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவரது மனைவி கலைவாணி. இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்தவர்கள். மோகனாஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

காரியாபட்டி அருகே கே. புதுப்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாரியப்பன் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மாரியப்பன் இரவில் வழக்கம் போல் படுத்திருந்தார். காலையில் கலைவாணி எழுந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் மாரியப்பன் மயக்கமடைந்து கிடந்தார்.

அவரை உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாரியப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரியப்பன், எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.