பெண் மரணம் 
செய்திகள்

தஞ்சை அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் மரணம்

தஞ்சை அருகே திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள குருங்குளம் காலனித் தெருவை சேர்ந்த சந்திரபோஸ் என்பவரின் மகள் சந்திரலேகா (வயது21). அதே தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா கண்ணு (37). ராஜா கண்ணு விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.

சந்திரலேகா, ராஜா கண்ணு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ரகசியமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் கோவிலில் ஏழு மாதத்திற்கு முன்பு திருமண செய்துள்ளனர். திருமண முடிந்தவுடன் சந்திரலேகா குருங்குளம் காலனித்தெருவில் உள்ள ராஜா கண்ணு வீட்டில் வசித்து வந்துள்ளார். சந்திரலேகா 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சந்திரலேகா அவருடைய கணவர் ராஜா கண்ணு வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சந்திரலேகாவின் தாயார் சசிகலா(40)வல்லம் போலீஸ், நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ராஜா கண்ணுவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அதனை சந்திரலேகா கண்டித்ததாகவும் இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையில் சந்திரலேகா பூச்சி மருந்தை குடித்ததாகவும் மேலும் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் தஞ்சை ஆர்.டி‌.ஓ வேலுமணியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

SCROLL FOR NEXT