கிருஷ்ணகிரி:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் இனயத்துல்லா(58). இவர் மணிவேல் என்பவரது லாரியில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் மணிவேல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி தாளப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் தொழில் சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 22-ம் தேதி இரவு மணிவேல் லாரி கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சுபேதர்மேடு பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நிற்பதாக மகேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகேந்திரன் மற்றும் தாளப்பள்ளியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாதவன்(35), சிவகுமார்(35) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டிரைவர் இனயத்துல்லாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு லாரி டிரைவரை இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இனயத்துல்லா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மகாராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார்.