செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது

லண்டனில் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த ஓரின பெண் ஈர்ப்பாளர்களை சரமாரியாக தாக்கி, வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

லண்டனைச் சேர்ந்தவர்கள் கிரிஷ் மற்றும் மெலனியா. இருவரும் ஓரின பெண் ஈர்ப்பாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கடந்த புதன் கிழமை அன்று வெளியே சென்றுவிட்டு  இரவு பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி, வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து மெலனியா தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

நானும் , என் தோழி கிரிஷும் தனிமையில் இருந்ததால் முத்தமிட்டுக் கொண்டோம். அப்போது பேருந்தில் இருந்த நான்கு இளைஞர்கள் எங்களிடம் முத்தம் கேட்டனர். நாங்கள் மறுத்தோம். அவர்கள் உடனே எங்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

பின்னர் என்னை சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மேல் சில்லரையை சிதறினர். இவற்றை தாங்காத என் தோழி அவர்களிடம் சண்டையிட்டாள். அவளையும் தாக்கினர். மிக மோசமாக நடத்தப்பட்டோம்

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'இச்சம்பவம் கடந்த மே 30ம் தேதி நள்ளிரவு 2.30 மணி அளவில் நடந்துள்ளது. மெலனியா புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பேரும் 15-18 வயதே ஆனவர்களாவர். சிசிடிவி கேமிரா மூலம் இந்த கும்பலில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்த அந்த பெண்களின் செல்போன், பேக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன' என கூறினார்.

இச்சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 'இரு பெண்களுக்கும் நடந்த இச்சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இது வேதனை தரும் தாக்குதல். யாராக இருந்தாலும்  தாங்கள் யார் என்பதையும், யாரை நேசிக்கிறார்கள் என்பதையும் மறைக்க வேண்டியதில்லை.