கர்நாடகத்தில் வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையடுத்து, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் பெங்களூரு, கலபுரகி, ஹாவேரியில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி இருந்தார்.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 13-ந் தேதி ராகுல்காந்தி மீண்டும் கர்நாடகம் வருகை தருகிறார். அன்றைய தினம் ஒரே நாளில் சித்ரதுர்கா, கோலார், மைசூரு ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு ராகுல்காந்தி பேச உள்ளதாகவும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
முதலில் சித்ரதுர்காவுக்கு வருகை தரும் ராகுல்காந்தி, பின்னர் கோலாருக்கு செல்ல உள்ளார். அதன்பிறகு, தான் மைசூரு மாவட்டத்திற்கு அவர் செல்ல இருக்கிறார். மைசூரு மாவட்டம் கிருஷ்ணராஜநகரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச இருக்கிறார். கிருஷ்ணராஜநகர் மைசூரு மாவட்டத்தில் இருந்தாலும், அந்த பகுதி மண்டியா பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது.