செய்திகள்

மோடிக்கு வெற்றி, இந்தியாவுக்கு தோல்வி - கே.எஸ். அழகிரி விமர்சனம்

பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.

மாலை மலர்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.