புதுடெல்லி:
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு உள்ளதுபோல் தங்களுக்கும் தனி அமைப்பு வேண்டும் என இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, பிற்படுத்தபட்டோர் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தை நீக்கிவிட்டு, அரசியலமைப்பு அந்தஸ்துடன் கூடிய (சமூக மற்றும் கல்வி) பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அமைப்புக்கு அரசியலமைப்பு சாசனப்படி அந்தஸ்து கிடைக்க வகை செய்யும் (123-வது) சட்ட திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இன்று தலித் மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்த சம்பவம் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அனல் பறக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். ஆளும்தரப்பில் சூடான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சிலரது கருத்துகளை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி பலனளிக்காத நிலையில் மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #OBC #NCBC #Loksabha #Wintersession #tamilnews