வங்கி கடன் மோசடி, கார்த்தி சிதம்பரம் கைது, மூன்று மாநில தேர்தல் முடிவுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் அமர்வு இன்று தொடங்கியது. இந்த அமர்வில் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது. முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இன்றைய கூட்டம் தொடங்கியதும் பாராளுமன்ற இரு அவைகளிலும் ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் எம்.பி.க்கள், பாராளுமன்றம் கூடியதும் உள்ளே வந்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவண்ணம் இருந்தனர். இதையடுத்து மக்களவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி குறித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PNBScam #BudgetSession