செய்திகள்

அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் காவிரி பிரச்சனையை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Parliament #LokSabha

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. அமளியை காரணம் காட்டி, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Parliament #LokSabha #Tamilnews