புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் கூடியதும், உலகக் கோப்பை வென்ற இந்திய ஜூனியர் அணிக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது ஆயுதப்படைசிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர் பதில் அளித்தார்.
அப்போது, காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறிய தாக்குதல்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். பா.ஜ.க. கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆந்திராவுக்கு சிறப்பு வசதிகள் கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் நடைபெற்றது.
உணவு இடைவேளைக்கு பின்னர் அவை கூடியபோது, தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அப்போது, பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார், பிரதமர் மோடி ஆந்திராவின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
ஆனால், இதனை எற்றுக்கொள்ளாத எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.