மருத்துவ நிபுணர் குழு 
செய்திகள்

ஊரடங்கு ஒரு கட்டத்துக்கு மேல் பயனளிக்காது- டாக்டர் ராமசுப்ரமணியம்

முழு ஊரடங்கு என்பது கோடாரியை எடுத்து கொசுவை கொல்வது போன்ற கதை என்றும், ஒரு கட்டத்துக்கு மேல் பயனளிக்காது என்றும் டாக்டர் ராமசுப்ரமணியம் தெரிவித்தார்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான நெறிமுறை வகுக்க, மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் இன்று 7-வது முறையாக முதல்வருடன் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை நடத்தி, பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழு, கொரோனாவுக்கு ஊரடங்கு மட்டுமே தீர்வல்ல என்பதால், ஊரடங்கை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும்படி பரிந்துரை செய்யவில்லை என தெரிவித்தனர்.

‘பொது போக்குவரத்தை திறந்துவிட்டதால் மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, பொது போக்குவரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்’ என நிபுணர் குழு உறுப்பினர் டாக்டர் பிரதீப் கவுர் தெரிவித்தார்.

‘முழு ஊரடங்கு என்பது கோடாரியை எடுத்து கொசுவை கொல்வது போன்ற கதை. ஒரு கட்டத்துக்கு மேல் பயனளிக்காது. மக்கள் தனிமைப்படுத்திக் கொள்வது, மாஸ்க் அணிவது மட்டுமே தீர்வு தரும்’ என டாக்டர் ராமசுப்ரமணியம் தெரிவித்தார்.

சென்னையில் தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகளை நடத்துவது நல்ல விஷயம். பரிசோதனைகளை அதிகரிப்பதால் அதிக பாதிப்பு தெரியவரும், அப்போதுதான் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் மருத்துவ குழு கூறி உள்ளது.