செய்திகள்

தஞ்சையில் வருமான வரி அலுவலகத்தை பூட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தஞ்சையில் வருமான வரி அலுவலகத்தை பூட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு, சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலை வருமான வரித்துறை அலுவலகம் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் மண்டல செயலாளர் குகன்குமார், மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமையில் அங்கு வந்தனர்.

பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு உள்ளே உள்ள அலுவலக கதவை பூட்டிக் கொண்டனர்.

அப்போது காவிரி எங்கள் பிறப்புரிமை என்று கோ‌ஷமிட்டனர். அதைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தஞ்சை டி.எஸ்.பி. நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு உடன்படாமல் தொடர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

இைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அலுவலகத்தின் பூட்டை திறந்து விடுங்கள். இல்லை நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டகாரர்களிடம் கூறினார்.

பின்னர் நாம் தழிழர் கட்சியினர் கதவின் பூட்டை திறந்து விட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.