திமுக 
செய்திகள்

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்க தடை கோரி திமுக முறையீடு

உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக முறையீடு செய்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. வக்கீல் நீலகண்டன் உள்பட வக்கீல்கள் சிலர் இன்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடை விதிக்கக் கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.

அப்போது, தலைமை நீதிபதி வீட்டில் இல்லாததால் சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிடுமாறு அதிகாரிகள் கூறினர்.

இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு வீட்டிற்கு சென்று அவரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி முறையிட்டனர்.

அவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி சத்திய நாராயணாவிடம் முறையிடுமாறு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து வக்கீல்கள் நீதிபதி சத்திய நாராயணாவிடம் முறையிட்டனர். அவர் இன்று விடுமுறை நாள் என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் இல்லாமல் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. எனவே, நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் வந்து முறையிடுமாறு கூறினார்.

இதையடுத்து வக்கீல்கள் நாளை கோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்க முறையிடுகிறோம் என கூறிச்சென்றனர்.