பீகாரின் வடகிழக்கு பகுதியில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அராரியா, புர்னியா, கிஷன்கஞ்ச், சுபால், ககாரியா, சகர்சா உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் புயலுடன் மழை பெய்து வருவதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் மற்றும் இடிமின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். விடாமல் பெய்து வரும் மழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கூரை வீடுகள் சேதமடைந்தன. சேத விவரம் முழுமையாகத் தெரியவில்லை.