நெல்லை:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வர்கீஸ் (வயது 45). இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார்.
இதையடுத்து அவர், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வர்கீசுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சிறை அதிகாரிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே வர்கீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.