சென்னை:
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிகளவு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. விபத்து மற்றும் உயிரிழப்பை தடுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு கமிட்டி அண்மையில் விவாதித்தது.
இதையொட்டி மோட்டார் வாகனம், சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.
போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது லைசென்சும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் 2017-ல் மட்டும் அதிவேகமாக பயணம் செய்த 61 ஆயிரத்து 170 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரது லைசென்சு கூட ரத்து செய்யப்படவில்லை,
மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 70 ஆயிரம் பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதிலும் யாருடைய லைசென்சும் ரத்து செய்யப்படவில்லை.
எனவே விபத்துக்கள் மற்றும் உயரிழப்புகளை தடுக்க செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்பட கடும் விதிமீறல்களுக்கு தற்காலிகமாக லைசென்சை ரத்து செய்ய வேண்டும என்று போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டு உள்ளார்.