வானவில் விழா பேரணி 
செய்திகள்

சென்னையில் வானவில் விழா பேரணி - நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

எல்.ஜி.பி.டி.கியூ. எனப்படும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் ஈர்முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் பங்கேற்ற வானவில் விழா பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை:

சென்னை வானவில் விழா என்பது நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் ஈர் முறையில் சேராத பாலின-பாலீர்ப்பினர்கள் (LGBTQ) ஆகியோரின் உரிமைகளை வலியுறுத்தி, வாழ்வியலைக் கொண்டாடி, அவர்களை ஆதரித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சென்னையில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் ஆகும்.

கடந்த 28-6-2009 அன்று முதன்முதலாக சென்னையில் நடைபெற்ற இந்த விழாவை ’வண்ணங்கள்’ என்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்புச் செய்கிறது.

பண்பாட்டு கலை நிகழ்வுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் உட்பட்ட பல நிகழ்வுகள் இந்த வானவில் பேரணி விழாவின் கூறாக இடம்பெறுகின்றன. இது உலகளவில் நடைபெறும் Pride parade நிகழ்வுகளை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது.  

அவ்வகையில், சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சாலையில் இருந்து லாங்க்ஸ் கார்டன் சாலைவரை இன்று நடைபெற்ற வானவில் விழா பேரணியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.