சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த தாய்-மகள். 
செய்திகள்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி தாய்-மகள் காயம்

திருப்பதி 2-வது மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை பாலாஜி நகரை சேர்ந்தவர் வம்சி. இவர் தனது மனைவி பாவினி மற்றும் மகள் யாமினியுடன் திருப்பதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் திருமலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

2-வது மலைப்பாதையில் ஹரிணி நிழல்பந்தல் அருகே சிறிது நேரம் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி மறைந்திருந்த சிறுத்தை ஒன்று பாவினி மற்றும் யாமினி மீது திடீரென பாய்ந்து தாக்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த வம்சி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது.

சிறுத்தை தாக்கியதில் அவர்கள் 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 2 பேரும் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து 2-வது மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளை தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை செய்து தனியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.