செய்திகள்

சோனியா காந்தி அளித்த விருந்தில் 17 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பாராளுமன்றத்தில் இன்று மதியம் அளித்த விருந்தில் 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று மதியம் விருந்து அளிப்பதற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தில் கலந்து கொளவதற்கு வருகை புரிந்த அனைத்து தலைவர்களையும் சோனியா காந்தி வரவேற்றார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் அதில் முக்கியமானவர்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. முன் கூட்டியே வேறு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இந்த விருந்தில் கலந்து கொண்டார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.