கைது 
செய்திகள்

ஆலந்தூர் அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கிய வக்கீல் உள்பட 2 பேர் கைது

ஆலந்தூர் அருகே ஏ.சி போடாத தகராறில் கால் டாக்சி டிரைவரை தாக்கியதாக வக்கீல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

ஆலந்தூர்:

சென்னையை அடுத்த பரங்கிமலை துளசிங்கபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 31). தனியார் கால் டாக்சி டிரைவர். இவர் கடந்த 1-ந் தேதி இரவு கிண்டியில் உள்ள ஓட்டலில் இருந்து தனது காரில் 3 பேரை ஏற்றிக்கொண்டு கோவிலம்பாக்கம் நோக்கி சென்றனர்.

ஆலந்தூர் கோர்ட்டு அருகே வந்தபோது, குடிபோதையில் இருந்த 3 பேரும் காரில் ஏ.சி. போடாததாக கூறி வாக்குவாதத்தில் ஈடு்பட்டனர்.

அதன் பின்னர், காரை விட்டு கீழே இறங்கி லோகநாதனை 3 பேரும் சேர்ந்து சராமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரைக் கண்டதும் அந்த 3 பேரும் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லோகநாதனுக்கு தலையில் 12 தையல் போடப்பட்டது. இதையடுத்து லோகநாதனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பரங்கிமலை போலீஸ் நிலையத்தை கால் டாக்சி டிரைவர்கள் முற்றுகையிட்டனர். இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் டாக்சி டிரைவர் லோகநாதனை தாக்கியதாக செங்கல்பட்டை சேர்ந்த வக்கீலான பிரதீவ்(35), பழவந்தாங்கலை சேர்ந்த ரஞ்சித்(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருன்றனர்.