சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபா புகுந்தார்.
அப்போது அங்கிருந்த தீபாவின் சகோதரர் தீபக் மற்றும் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது தீபா தாக்கப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக தீபா தரப்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் தன்னை தாக்கியவர்களை கைது செய்யும் படி கோரியிருந்தார். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக தீபா பேரவை மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி என்பவர் கடந்த 22-ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற போது மனுவை வாங்கவில்லையாம்.
இதனால் 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சுப்பிரமணி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் மனுவுடன் வந்தார்.
கமிஷனர் அலுவலக வாசலில் இருந்து தரையில் உருண்டு சென்று மனு கொடுக்கப்போவதாக தரையில் படுத்து உருண்டார். அவரை தொடர்ந்து பெண்களும் தரையில் உருள சென்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இதனால் கமிஷனர் அலவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.