செய்திகள்

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு - முதல்வருடன் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை

தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam

மாலை மலர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது.

மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.