செய்திகள்

அமெரிக்க ஓட்டல் தாக்குதல்: போலீசிடம் இருந்து தப்பிக்க ஓட்டல் அறையில் கேமராக்கள் பொருத்திய கொலையாளி

அமெரிக்க ஓட்டலில் இருந்து துப்பாக்கியால் சுட்ட போது போலீசிடம் பிடிபடாமல் இருக்க தீவிரவாதி ஓட்டல் அறையின் உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

லாஸ்வேகாஸ்:

அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில் மண்டேலாய் பே ஓட்டலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஸ்டீபன் பட்டாக் என்ற தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதால் 59 பேர் உயிரிழந்தனர்.

அவன் ஓட்டலின் 32-வது மாடியில் இருந்து இசைநிகழ்ச்சியை காண கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். அவன் தொடர்ந்து 9 நிமிடங்கள் சுட்டு குண்டு மழை பொழிந்தான்.

அதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் உயிர்பிழைக்க அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். இருந்தும் பலர் பலியாகினர்.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட போது போலீசிடம் பிடிபடாமல் இருக்க தீவிரவாதி ஸ்டீபன் பட்டாக் ஓட்டல் அறையின் உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை பொருத்தியிருந்தான். மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலின் ஹால் பகுதியில் உள்ள ‘ரூம் சர்வீஸ் கார்ட்’ பகுதியிலும் கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தான்.

அதற்காக வெளிநாடுகளில் இருந்து ரூ 6 கோடியே 50 லட்சம் பணம் திரட்டி இருக்கிறான். இத்தகவலை லாஸ்வேகாஸ் ஜோசப் லம்பிர் போ தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலை பட்டாக் திட்டமிட்டு நடத்தியிருக்கிறான் என்றும் அவர் கூறினார்.

ஸ்டீபன் பட்டாக் தனது காதலி மரிலோயூ டென்லியுடன் தனது வீட்டில் வசித்து வந்தான். துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது மரிலோயூ டென்லி இல்லை. பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இருந்தாலும் திரும்பியதும் துப்பாக்கி சூடு குறித்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.