செய்திகள்

போதைப் பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க இலங்கை அரசு ஒப்புதல்

இலங்கையில் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை களையெடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வகையில் போதைப் பொருள் சார்ந்த குற்றச்செயல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க முடிவு செய்தது. இந்த முடிவிற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, இது தொடர்பாக இதுபற்றி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறுகையில், “தீவிர குற்றச்செயல்களை தடுப்பதற்கு மீண்டும் மரண தண்டனையை கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அதிபர் சிறிசேனா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதனை அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களை நடத்தி நாட்டை அழிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சில குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தாலும் வெளியே போதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்கின்றனர்” என்றார்.