செய்திகள்

நாகலாந்து: நிலச்சரிவால் மணிப்பூர்- நாகலாந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து தடை

நாகலாந்து மாநிலத்தின் தலைநகரில் ஏற்பட்ட நிலச்சரிவால் மணிப்பூர்-நாகலாந்து இடையேயான தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.

மாலை மலர்

கோகிமா:

நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோகிமா மாவட்டத்தில் உள்ள விஸ்வெமா கிராமத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் 70 மீட்டர் தூரம் அளவிலான சாலை அடித்துச் செல்லப்பட்டது.

இதன் காரணமாக நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களை இணைக்கும், அந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணிப்பூர் செல்லும் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சாலையை கடப்பதற்காக தற்காலிகமாக பாதை அமைத்துள்ளனர். இதன் மூலம் அங்கு சிக்கியுள்ள பயணிகள் சாலையை கடந்து செல்கின்றனர். அவர்களின் பொருட்களை எடுத்துச் செல்ல அருகிலுள்ள கிராம மக்கள் உதவுகின்றனர்.

சாலையை சீரமைப்பதற்கான பணிகள், பார்டர் ரோட் டாஸ்க் ஃபோர்ஸ் உதவியுடன் நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.