செய்திகள்

திண்டுக்கல் அருகே போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி நில அபகரிப்பு

போலி வாக்காளர் அட்டையை பயன்படுத்தி நிலத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

தஞ்சாவூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி புஷ்பவதி (வயது 48). இவர்கள் இருவரும் கொடைக்கானலில் கொத்தடிமைகளாக வேலை பார்த்ததால் அரசு இவர்களை மீட்டு அவர்களது மறு வாழ்வுக்காக 2 ஏக்கர் நிலத்தை ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எல்லைப்பட்டியில் வழங்கியது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் இறந்து விட்டதால் புஷ்பவதி பிழைப்புக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கே சென்று விட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்டு எல்லப்பட்டியைச் சேர்ந்த பண்ணியமூர்த்தி என்பவர் தனது போட்டோவை இறந்து போன ராமகிருஷ்ணனின் வாக்காளர் அடையாள அட்டையில் வைத்து போலி ஆவணம் தயாரித்தார். பின்னர் அந்த இடத்தை திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி, தங்கவேலு ஆகியோருக்கு ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தார்.

நிலத்தை வில்லங்கம் பார்த்த போது போலி ஆவணம் என தெரியவரவே நில அபகரிப்பு பிரிவில் புஷ்பவதி புகார் அளித்தார். போலீசார் நில அபகரிப்பு செய்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.