செய்திகள்

மரக்காணத்தில் நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பி கைது

மரக்காணம் அருகே நிலத்தகராறில் அண்ணனை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.