செய்திகள்

நிதிஷ்குமார் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது: லல்லு மகன் தாக்கு

நிதிஷ்குமார் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்று பீகாரில் நடந்த பேரணியில் லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். #Tejaswi #nitishkumar #lalu

மாலை மலர்

பாட்னா:

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.

அதன்பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற பா.ஜனதா நிதிஷ்குமாருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.

நிதிஷ்குமார் அமைச்சரவையில் மந்திரிகளாக இடம் பெற்று இருந்த லல்லு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.

லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மகன்கள் இருவரும் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள்.

நேற்று பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 22-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாட்னாவில் நடந்த பேரணியில் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் கலந்து கொண்டனர்.

அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-

கடந்த தேர்தலில் நிதிஷ்குமாருடன் லல்லுபிரசாத் யாதவ் கூட்டணி அமைத்தார். நிதிஷ்குமாரை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைக்க பல தியாகங்கள் செய்தார். நிதிஷ்குமார் ஏதாவது தியாகம் செய்துள்ளாரா?

இப்போது நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. நீங்கள் ஓய்வு பெறுங்கள் அல்லது மக்கள் உங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவார்கள். 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்னை மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து உள்ளார்கள்.

இப்போது எனக்கு நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவி தருவதாக கூறினாலும் அதை நான் ஏற்கமாட்டேன். மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளது.

நிதிஷ்குமாருக்கு அரசியல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள்தான் அரசியலில் நீடிக்க முடியும். வருகிற தேர்தலில் சமதர்மத்துக்கும், ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி.

பீகார் சட்டசபையின் பதவி காலம் 2020-ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து முன்கூட்டியே பீகார் சட்டசபைக்கும் தேர்தல் வரும். தற்போது நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறார். அவர் அங்கு இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார் #Tejaswi  #nitishkumar #lalu