செய்திகள்

சிறப்பு அந்தஸ்து விவகாரம் - பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீது லாலு குற்றச்சாட்டு

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தராத முதல் மந்திரி நிதிஷ்குமார், தனது பதவியை காப்பாற்ற மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் குற்றம் சாட்டினார்.

பாட்னா:

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த சுசில் குமார் மோடி பதவி வகித்து வருகிறார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் பாட்னா சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தராத முதல் மந்திரி நிதிஷ்குமார், தனது பதவியை காப்பாற்ற மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார் என லாலு பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நிதிஷ்குமார் ஏன் எடுக்கவில்லை. தனது பதவியை காப்பாற்ற அவர் மாநிலத்தின் நலன்களை பறிகொடுத்துள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது முசாபர் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிககையும் ஏன் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் தனது மந்திரிகளை மத்தியில் இருந்து விலக்கி கொண்ட நிலையில், லாலுவும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT