லாகூர்:
மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் - உத் - தவா தீவிரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீதை கைது செய்வதற்கு தடை விதித்து லாகூர் கோர்ட் உத்தரவிட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவன், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறான்.
இதைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழு 2008-ல் வெளியிட்ட தீவிரவாதிகளின் பட்டியலில், ஹபீஸ் சயீதின் பெயரையும் சேர்த்தது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்காவும் குரல் கொடுத்து வந்தது.
அமெரிக்காவும், இந்தியாவும் கொடுத்த தொடர் நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு, கடந்த ஆண்டு ஹபீஸ் சயீதை கைது செய்து, வீட்டுச் சிறையில் வைத்தது. ஆனாலும் அவன் விடுதலை செய்யப்பட்டான்.
இதற்கிடையே, தடை செய்யப்பட்ட தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளை பார்வையிட, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு இஸ்லாமாபாத் வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதால்,
தன்னை கைது செய்யக்கூடாது எனக்கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீத் மனு தாக்கல் செய்தான்.
இந்நிலையில், அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஹபீஸ் சயீதை கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். # HafizSaeed #Pakistan #tamilnews