கொலை செய்யப்பட்ட லட்சுமிபதி - கைது செய்யப்பட்ட மூர்த்தி 
செய்திகள்

ராயக்கோட்டையில் மைத்துனரை குத்தி கொன்ற கூலித்தொழிலாளி கைது

ராயக்கோட்டை அருகே மைத்துனரை குத்தி கொன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் லட்சுமிபதி (வயது 25). கூலி தொழிலாளி.

இவரது தங்கை லட்சுமி தேவியை அதே பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் மூர்த்தி (24) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காலித்து திருமணம் செய்து கொண்டார்.

லட்சுமிதேவிக்கும், அவரது கணவர் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு செல்வார். மூர்த்தி மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்து வருவார்.

நேற்று மீண்டும் கணவன் -மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற லட்சுமிதேவியை அழைக்க மூர்த்தி சென்றார்.

மாமனார் வீட்டு வாசலில் மூர்த்தியின் மைத்துனர் லட்சுமிபதி தனது மனைவி கிரிஜாவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது மனைவி எங்கே என்று லட்சுமிபதியிடம் மூர்த்தி கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி கத்தியால் லட்சுமிபதியை நெஞ்சில் குத்திவிட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இந்த கொலை குறித்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மைத்துனரை குத்திக் கொன்ற மூர்த்தியை இன்று கைது செய்தனர், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

கொலை செய்யப்பட்ட லட்சுமிபதிக்கு ஒரு மகன் உள்ளார். அவரை கொலை செய்த கூலி தொழிலாளி மூர்த்திக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.