பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக எடுத்தாக எதிர்கட்சிகள் பாராட்டின. ஆனால் அடுத்த நாளே குறை சொல்ல தொடங்கி விட்டார்கள்.
எதிர்கட்சிகள் அப்படித்தான் செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம். கோஷம் கூட எழுப்பலாம். ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது.
எனவே அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தினால் தான் முழு தொகையும் பயனாளிகளுக்கு கிடைக்கும். வெள்ளச் சேதங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை அளித்த பின்பு தான் அதற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்க முடியும்.
புயல் பாதிப்பால் ஏற்பட்ட இழப்பீடுகளுக்காக மத்திய அரசிடம் தமிழக பா.ஜ.க. சார்பில் அறிக்கை கொடுக்க இருக்கிறோம்.
ரஜினி, கமல், விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என தீர்மானிப்பவர்கள் மக்கள் தான்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். இடைத்தேர்தலே நடைபெறுமா? என்ற நிலையில் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கை பார்த்து பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை சேர்த்துக் கொண்டு போட்டியிட நினைப்பவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள தயங்குவது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.