நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான இல.கணேசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு தேர்வு முடிவுகள் வரும் போதும் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குடும்பத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அதே சமயம் இது போன்ற தற்கொலையை ஆதரிக்கக்கூடாது. மாணவர்களுக்கு மன வலிமையை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை கட்டாயமாக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது தமிழே தெரியாத ஓர் இளைஞர் சமுதாயம் உருவாகி வருகிறது.
இந்தியை விருப்பப்பாடமாக மட்டுமே கூறப்பட்டது. ஆனால் அதனை புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை ஏற்படுத்த முயன்றனர். அதனை மத்திய அரசு சரியான கோணத்தில் கையாண்டது.
மயிலாடுதுறை- தரங்கம்பாடி ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அதே வேளையில் வேதாரண்யத்தில் உப்பு தொழிலுக்கு பயன்படும் வகையில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.